முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும்: ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி கலெக்டரிடம் மனு
தேனி, ஏப்.3-
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் பா.ஜ.க நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமையில் நிர்வாகிகள் சிலர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வரும் வீரபத்திரன் என்பவர் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு பணங்களை கையாடல் செய்து வருகின்றார்.
இவற்றில் உச்சகட்டமாக கல்லூரியில் படித்து வரும் தனது மகன் யோக பாலாஜி என்பவரது பெயரிலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் சித்ரா மற்றும் பல்வேறு நபர்களது பெயர்களில் போலியாக கணக்கு எழுதி ஊராட்சி மன்ற வளர்ச்சிக்கு வரும் பணங்களை கையாடல் செய்துள்ளார்.
இப்படி தொடர்ந்து முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும் சில்வார்பட்டி ஊராட்சி மன்ற செயலர் வீரபத்திரன் என்பவர் மீது துறை ரீதியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஊராட்சி பொதுமக்கள் சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
............................
Comments