தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவிலில் சித்திரை திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தேனி, ஏப்.14-
தேனி அல்லிநகரம் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி அன்று காவடி திருவிழா என்று அழைக்கப்படும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மாதம் 29-ம் தேதி மலைக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கிடையே திருவிழாவில் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் பங்குனி 1-ம் தேதி முதல் விரதம் இருந்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவை முன்னிட்டு வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்தில் காவடிகள் ஊர்வலத்துடன் நேற்று மாலை அல்லிநகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு தேனி நகர் வழியாக பங்களா மேடு பகுதியில் உள்ள சோலைமலை அய்யனார் கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் மலர் அலங்காரத்தில் காவடிகளுடன் புறப்பட்டு செண்டா மேளம், தாரை தப்பட்டையுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சுற்றி பிற்பகலில் மலைக்கோவில் பகுதியை சென்றடைந்தது. இந்த காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம், மயில் காவடி, இளநீர் காவடி போன்ற காவடிகளை எடுத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினார்கள்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவில் செல்லும் வழியில் ஆங்காங்கே பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பானக்கம், நீர்மோர், தண்ணீர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் வழங்கப்பட்ட நீர்மோர் மற்றும் அன்னதானத்தை இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில் குமார், மாவட்ட இணை அமைப்பாளர் செல்வ பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் சோலைராஜ் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

....................................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments