Skip to main content

தேனியில் பிப் 2-ந் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட்டு அனுமதி: நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாற்றி அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு

தேனி, ஜன.31-


தேனியில் 7 ஒன்டர்ஸ் அமைப்பின் சார்பில் பிப்ரவரி 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தேனி நகர்  பகுதியில் மதுரை சாலையில் தேனி பழைய பஸ் நிலையம் முதல் பங்களா மேடு வரை ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சி தேனி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடும். எனவே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று பாஜக, இந்து முன்னணி உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். 

இந்த நிலையில் தேனி நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை என போலீஸ் தரப்பிலும் கூறப்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து 7 ஒன்டர்ஸ் அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி W.P 2921/2025 என்ற எண்ணில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு தேனி நகரில் பிப்ரவரி 2-ந் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்த அனுமதி அளித்தது. 

அதில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிட்டபடி நகர் பகுதியில் நடத்தாமல் நகர் பகுதியை தவிர்த்து விட்டு வேறு இடங்களில் நடத்தி கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. 
எனவே ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தேனியில் பிப்ரவரி 2-ந் தேதி தேனி-கம்பம் சாலையில் முத்துதேவன்பட்டியில் உள்ள நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து வீரபாண்டி பைபாஸ் வரை மாற்று இடத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான இடத்தை போலீசார் முடிவு செய்து கொடுத்துள்ளனர் என்று 7 ஒன்டர்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments