Skip to main content

தேனி அருகே கோடாங்கிபட்டியில் ரூ.30.91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

தேனி, ஜன.29-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கோடாங்கிபட்டியில் ரூ.30.91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தினை 29.1.2025 அன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா புதிய அலுவலக கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து அலுவலக பகுதியை பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் வருவாய்த்துறையின் மூலமே செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் என 2 வருவாய் கோட்டங்களில், 5 வட்டாட்சியர் அலுவலகம், 17 வருவாய் ஆய்வாளர் அலுவலகம், 114 கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலரால் வருவாய் ஆய்வாளர் மூலம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சொத்து மதிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான உண்மை தன்மை குறித்து மேல் விசாரணை செய்யும் அலுவலராகவும், நிலவரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்பவராக வருவாய் ஆய்வாளர் செயல்படுகிறார். கோடாங்கிபட்டியில் பழைய கட்டத்தில் செயல்பட்டு வந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தற்பொழுது புதிய கட்டிடம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் போட்டி வட்டாட்சியர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் அன்னலெட்சுமி, பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 
.....................

Comments