தேனியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி பா.ஜ.க-வினர் கலெக்டர், எஸ்,பி-யிடம் கோரிக்கை மனு
தேனி நகர பா.ஜ.க தலைவர் ரவிக்குமார் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் செல்வேந்திரன், விஜயகுமார், மணிகண்டன், முத்துராஜா, பெரியசாமி, சரவணன், முத்துச்செல்வன், குமரேசன் தமிழரசன் ஆகியோர் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, வருகின்ற பிப்ரவரி 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேனி நகர் பகுதியில் மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது .
தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சார சீரழிவுக்கும், மேலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருக்கக்கூடும் இந்த நிகழ்ச்சி தேனி மாவட்டம் முழுவதும் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டது கிராமங்களை அதிகமாக கொண்ட தேனி மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை தடம் மாறி செல்வதற்கு வாய்ப்பாக அமைகிறது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பலர் தன்னிலை மறந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு பின்னால் வணிக நோக்கமும், கலாச்சாரத்தையும், பண்பாட்டை சீரழிக்கும் நோக்கமும் மட்டுமே இருக்கிறது.
எனவே தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் (மகிழ்ச்சி தெரு) நிகழ்ச்சியினை ரத்து செய்து வருங்கால சந்ததியினர் வளமாக வாழ வழி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நாகராஜ், முதன்மை நிருபர்
...................
Comments