தேனி, ஜன.27-
தேனி மாவட்டம் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதுவாக்குடி மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம். இப்பகுதியில் பழங்குடியின மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். போடியில் இருந்து குரங்கணி சென்று அங்கிருந்து ஜீப் மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கரடுமுரடான மலை பகுதியை கடந்து சென்றால் தான் இக்கிராமத்தை அடைய முடியும்..
தேனி மாவட்ட நல்லோர் வட்டம் மாவட்ட பொறுப்பாளர்களின் சார்பாக கடும்பனி மற்றும் குளிரில் வாழ்ந்து வரும் இப்பகுதி பழங்குடியின மக்களுக்கு குளிர்கால ஆடைகள் வழங்கும் விழா மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்வாதார நீண்டநாள் பிரச்சனைகளை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்பிக்கும் களப்பணி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நல்லோர் வட்டம் தேனி மாவட்ட பொறுப்பாளர் குறிஞ்சிமணி தலைமை தாங்கினார். பாரம்பரிய இயற்கை விவசாய மாநில பொறுப்பாளர் நாட்ராயன் குரங்கணி கிராம முன்னாள் 4-வது வார்டு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுவாக்குடி கிராம தலைவர் வேலப்பன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு குளிர்கால ஆடைகளை நல்லோர் வட்டம் தேனி மாவட்ட பொறுப்பாளர் குறிஞ்சிமணி வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து தெருவிளக்குகள், சாலை வசதிகள், பொது சுகாதார வசதிகள் ஆய்வு, மருத்துவ வசதிகள் ஆய்வு, கல்வி வசதிகள் இதுபோன்ற பல்வேறு அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை நல்லோர் வட்டம் பொறுப்பாளர்கள் ஆய்வு செய்து இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். முக்கிய பிரச்சனைகளை தேனி மாவட்ட கலெக்டர் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக நல்லோர் வட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முதுவாக்குடி பழங்குடியின மக்களிடம் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நல்லோர் வட்டத்தின் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெய்குமார், முத்து, முருகன், பழனிச்சாமி, ராஜாங்கம், கணேசன் ,மருந்தாளுநர் ரமேஷ் , ஆராய்ச்சியாளர் டாக்டர் கார்த்திக் பாண்டி மற்றும் அந்தோணி மகாராஜன் கொட்டக்குடி கிராம நல்லோர் வட்டம் பொறுப்பாளர் ப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் முதுவாக்குடி கிராம நல்லோர் வட்டம் கிளை பொறுப்பாளர் பரமசிவம் நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
.....................
Comments