கண்ணகி கோவிலுக்கு செல்லும் தெல்லுக்குடி பாதையை பார்வையிட சென்றவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்
தேனி, ஜன.17-
தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக செல்லும் தெல்லுக்குடி பாதையை பார்வையிட சென்ற விவசாயிகளையும், கண்ணகி கோயில் பாதை மீட்பு குழுவினரையும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தேனி மாவட்டம், கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோவில். இக்கோவிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ.,துாரம் தமிழக வனப்பாதை உள்ளது. அதுபோல கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி. மீ., துாரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதையும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று இங்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் கேரளா அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிகமானோர் நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கேரள வனத் துறை பல்வேறு கெடுபிடிகளுடன் தமிழக பக்தர்கள் கோவிலுக்கு சென்று திரும்புகின்றனர்.
அதனால் தமிழக வனப்பகுதியில் உள்ள பளியன்குடி வழியாக 6.6 கி.மீ.,தூரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ.,தூரமும் உள்ள பாதையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ரோடு அமைக்க நடவடிக்கை எடுத்தால் பக்தர்கள் சுதந்திரமாக சென்று கண் ணகி அம்மனை வழிபட முடியும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக வனப்பகுதியில் பாதை அமைக்க வலியுறுத்தி அரசுக்கு மனு அனுப்புவதற்காக கண்ணகி கோவில் பாதை மீட்புக் குழுவை சேர்ந்த வக்கீல் எம்.கே.எம்.முத்துராமலிங்கம், கண்ணகி கோவில் அறக்கட்டளையை சேர்ந்த முருகன், முல்லைச்சாரல் விவசாய சங்கத்தை சேர்ந்த கொடியரசன், ஜெயபால், ராஜா ஆகியோர் 16.1.2025 அன்று ஊமையன் தொழு அருகே உள்ள தெல்லுக்குடி பாதையை பார்வையிட சென்றனர்.
அப்போது தமிழக வனத்துறையினர் அவர்களுக்கு அனுமதி வழங்காததால் ஊமையன் தொழு மற்றும் பளியன்குடி வரை சென்று திரும்பினர். எனவே பாதை விரைவாக அமைக்க வலியுறுத்தி அரசுக்கு மனு அனுப்ப உள்ளதாகவும், தாமப்படுத்தினால் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என பாதையை பார்வையிட சென்றவர்கள் தெரிவித்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
.......................
Comments