Skip to main content

தேனி மாவட்டத்தில், கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தேனி, ஜன.16-

தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கூடலூர் நகராட்சி, லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில், 15.1.2025அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 184-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்),  ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது, 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு விவசாயத்திற்கும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்து, விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்றவாறு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டைடல் பூங்காவினை உருவாக்கி, ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளார்கள்.

பென்னிகுவிக் அவர்களின் 184-ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மேற்கு நோக்கி பாயும் முல்லை பெரியாறு நதியின் குறுக்கே அணையை கட்டியதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.

தென்மாவட்ட நீர்வளத்திற்கு அடையாளமாக உள்ள கர்னல் ஜான்பென்னிகுவிக் அவர்களின் திருவுருவச்சிலை முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மதுரையில் திறந்து வைக்கப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தில் பென்னிகுவிக் அவர்களின் மார்பளவு சிலை முல்லைப் பெரியாறு அணை, தேக்கடியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை மற்றும் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது,

மேலும், பென்னிகுவிக் அவர்களின் சொந்த ஊரான இலண்டனில் கேம்பர்ளி நகரமையப் பூங்காவில் அன்னாரின் திருவுருவ சிலை திறப்பு விழாவில் விவசாய குடும்பத்தை சார்ந்த நாங்களும் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாடு வரலாற்றில் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பெற்றுள்ள பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழ்நாடு செழிப்பதற்கு காரணமாக அமைந்தவர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் புகழ் என்று நிலைத்து நிற்கும் என்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பென்னிகுவிக் அவர்களின் தானிய வரைபட ஓவியத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கு வழங்கினார்.

இதன் பின்னர் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், இவ்விழாவில் கோலிகுண்டு, கிட்டி, பம்பரம் சுற்றுதல், மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம், போன்ற விளையாட்டு போட்டிகளும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நையாண்டி மேளம், தப்பாட்டம், தேவராட்டம், கரகாட்டம், மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல், போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது.

பென்னிகுவிக் அவர்களின் 184-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மொத்தம் 184 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வெளிநாட்டினர் கலந்து கொண்டு இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 

.....................

Comments