Skip to main content

தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்: மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் கொண்டாடப்பட்டது.


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், முன்னிலையில் 10.1.2025 அன்று கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் விழாவாகும். அனைத்துத் தொழில்களுக்கும், அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், பம்பரம் சுற்றுதல், கோலி விளையாடுதல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் பணியாளர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பாட்டுப்போட்டி, பலகுரல் போட்டி (Mimicry) உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொங்கல் வைத்து, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும், பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

நாகராஜ், முதன்மை நிருபர்

.....................

Comments