பெரியகுளத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் : பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
தேனி, பிப்.1-
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 30 வார்டுகளை கொண்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சியாகும். இங்கு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பொதுப்பணித்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம், கிளை சிறைச்சாலை, கால்நடை மருத்துவமனை என அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அனைத்தும் ஒரே பகுதியில் அமைந்துள்ளதால் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பல்வேறு தேவைகள் வேண்டி மேற்படி அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த அலுவலகங்களுக்கு பெரியகுளத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறு சிறு சாலைகள் இருப்பினும் மிக முக்கிய சாலையாக கருதப்படுவது தண்டுபாளையம் ரோடு பிரதான சாலையாகும். இந்த சாலையில் இறைச்சி கூடங்கள், காய்கறி மார்க்கெட் வழியாக மேற்படி அரசு துறை சார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆம்புலன்ஸ், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ,ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் என தினசரி
நூற்றுக்கணக்கான வாகனங்கள் காலை முதல் இரவு வரை இந்த சாலை வழியாக சென்று வருவதால் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாக மேற்படி சாலை காணப்பட்டு வருகின்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையானது குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்து வந்ததால் பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை புதுப்பிக்க வேண்டி ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சாலையை சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டிருந்தன. மேற்படி சாலையை சீரமைப்பதற்கான பணியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறையினர் மேற்பார்வையில் ஒப்பந்த நிறுவனமானது பணியை தொடங்கினர்.
பகல் நேரங்களில் எப்போதும் அதிக அளவு போக்குவரத்து நிறைந்து காணப்படுவதால் ஜன 31-ம் இரவில் பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சரவணன் மேற்பார்வையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் மேற்படி சாலையை புதுப்பித்து தார் சாலை அமைக்கும் பணிகள் ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்படி முக்கிய சாலையை புதுபித்த பெரியகுளம் நெடுஞ்சாலை துறையினருக்கு பெரியகுளம் பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
......................
Comments