தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது சுகாதார பணிகளை மேற்கொள்ள ஊராட்சிகளுக்கு டிராக்டர் வாகனம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24.4.2023 அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா கோருதல், பட்டா மாறுதல். கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல். மற்றும் காவல்துறை தொடர்பான மனுக்கள் என 267 கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் அவர்கள் பெற்று. குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது தகுதி வாய்ந்த மனுக்கள் மீது எந்தவித காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் நிலை தொடர்பாகவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறையின் சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ள ஏதுவாக தலா ரூ.9 லட்சம் வீதம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 2 டிராக்டர் வாகனங்களை உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தம்மிநாயக்கன்பட்டி, உஅம்மாபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் அவர்கள் வழங்கினார். இந்த டிராக்டர் வாகனங்களை உ.அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் நா.கவிதா. தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செ.அன்னலெட்சுமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் 3 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 4 நகர்ப்புற நெசவாளர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.16 லட்சம் அரசு மானியத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்,
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி. கைத்தறி மற்றும் துணிநால் துறை மதுரை மண்டல உதவி இயக்குநர் பா.வெங்கடேசலு, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ந.சாந்தி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments