Skip to main content

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சி தான் இந்த வாக்காளர் பட்டியல் SIR: தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேட்டி

தேனி, நவ.7-

தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியில், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா 7/11/2025 அன்று நடைபெற்றது. 

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., வருகின்ற நவம்பர் 11-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் வாக்காளர் பட்டியல் S.I.R திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு, SIR-யை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து SIR-யை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீகாரில் நாம் தெளிவாக பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்,  மக்களின் வாக்குரிமை எந்த அளவிற்கு பறிக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் அதற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் பீகாருக்கு சென்று அங்கே நடக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முழு ஆதரவையும் அளித்து இருக்கிறார்.

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சி தான், இந்த வாக்காளர் பட்டியல் S.I.R. அதுமட்டுமில்லாமல், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல பிரச்சனைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தான் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணி கட்சிகளும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்..

இதனைத்தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும்.  இந்த சமூகம் முதலில் சில விஷயங்களில் பெண் மீது பழி சுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்து இருக்கிறார். அவர்களுக்கு மிக விரைவில், அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியோடு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கண்டனம் தெரிவிக்க முடியும்; ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியை பற்றிய கேள்விக்கு; “‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின் போது நானும் உடன் இருந்தேன். வெற்றி பெறவில்லை என்றால் யாருடைய பதவியும் பறிக்கப்படும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையை ஒரு கட்சித் தலைவர் வழங்குவது என்பது நிச்சயமாக தேவையான ஒன்று. வெற்றி பெற வேண்டும், அதற்காக அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் அனைவரிடமும் சொல்லி உள்ளார் என்று பதிலளித்தார்.

இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

.................................

நாகராஜ், செய்தி ஆசிரியர் 




Comments