Skip to main content

மலை கிராம குழந்தைகள் 31 பேரை ஜனாதிபதி மாளிகைக்கு பெற்றோருடன் அழைத்து செல்வேன்: தேனியில் நடந்த விழாவில் தங்க தமிழ்செல்வன் எம்.பி., அறிவிப்பு

தேனி, ஜூலை.26-

தேனி மாவட்ட ஆருடெக்ஸ் சொசைட்டி மற்றும் சென்னை நிழற்குடை பவுண்டேஷன் சார்பில் வாங்க படிக்கலாம் என்ற தலைப்பில் பழங்குடியினர் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் பாராட்டு விழா தேனி அருகே ரத்தினம் நகரில் உள்ள சுந்தரம் மஹாலில் 26.7.2025 அன்று நடைபெற்றது. 

விழாவிற்கு வந்த அனைவரையும் ஆருடெக்ஸ் சொசைட்டி இயக்குனர் ராஜா வரவேற்றார். 

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர்.விஆர். ராஜன், நிழற்குடை பவுண்டேஷன் அரிசித்ரா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் போது நிழற்குடை பவுண்டேஷன் திட்டங்கள் குறித்து பவுண்டேஷன் சேர்மன் பிரசன்னா ராமசாமி விளக்கி பேசினார்.


விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசி பழங்குடியினர் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சாதனைப்படைத்த குழந்தைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.
முன்னதாக விழாவின் போது தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜன் தலைமையில் விழா குழுவினர் தேனி பாராளுமன்ற உறுப்பினரிடம் ஒரு கோரிக்கை வைத்து மனு வழங்கினர். அந்த கோரிக்கையில் தேனி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமங்களை சேர்ந்த 20 குழந்தைகளை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து சென்று சுற்றி காண்பித்து தேனீர் விருந்துக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 
இதற்கு மனுவை பெற்றுக்கொண்டு பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தேனி மாவட்டத்தில் 31 மலை கிராமங்கள் உள்ளன. அதனால் கிராமத்திற்கு ஒரு குழந்தை வீதம் அவர்களது பெற்றோர்களுடன் டெல்லிக்கு அழைத்து சென்று ஜனாதிபதி மாளிகை சுற்றி காண்பித்து தேனீர் விருந்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வேன் என உறுதி அளித்தார்.
விழாவில் பழங்குடியினர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பழங்குடியினர் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது முடிவில் ஆருடெக்ஸ் சொசைட்டி கன்னீஸ்வரி நன்றி கூறினார்.

.......................

நாகராஜ், தலைமை நிருபர் 




Comments