Skip to main content

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் : தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

தேனி, மார்ச்.2-

தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மதுராபுரியில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 2.3.2025 அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை இராமர் தலைமை தாங்கினார்.

தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ்.டி.கே.ஜக்கையன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரதி மீனா சேகர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன், கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், மதுரை கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜகுரு, ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் லோகிராஜன், பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன் ஆகியோர் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், கழக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விஸ்வநாதன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதனைத்தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக  பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
தேனி மாவட்டத்தில் நடைபெறுகின்ற அம்மா அவர்களின் பிறந்தநாள் கூட்டம் மாநாடு போல் உங்களால் காட்சியளிக்கிறது. இதை பார்த்தால் பல பேருக்கு எரிச்சல் தான் வரும்.
இந்த மக்கள் பாசமுள்ள மக்கள். இந்த மண் தெய்வீக மண். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு தலைவர்கள் இங்கே நின்று முதலமைச்சராக வெற்றி பெற வைத்த மாவட்டம்.

இரு பெரும் தலைவர்களை வெற்றி பெற வைத்து இந்த நாடே செழிப்பாக இருக்க அடித்தளம் அமைத்த மக்கள் இந்த மாவட்ட மக்கள். இந்த மாவட்டத்தில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். எப்படி இன்றைக்கு அம்மா அவர்களின் பிறந்தநாளை, நம் குடும்பத்தில் ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடுவோமா? அதே போல தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் விழாவாக இன்று கொண்டாடி வருகிறோம்.

எம்ஜிஆர் காட்டிய வழியில் அம்மா அவர்கள் சிறப்பான ஆட்சியை தந்தார்கள். இந்த 2 பெரும் தலைவர்களின் ஆட்சியில் தான் தமிழகம் மேன்மை அடைந்தது. அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்தது.இதற்கு காரணமாக அமைந்த மண் நம்முடைய தாய்மண்.
அன்றைக்கு எம்ஜிஆர் அவர்கள் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுபோல ஜெயலலிதா அவர்கள் ஆண்டிபட்டி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேனி மாவட்டத்திலே அம்மா அவர்களின் ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி இருண்ட கால ஆட்சி என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு தேனி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள் அம்மா அவர்களின் ஆட்சியில் போடப்பட்ட திட்டத்திற்கு எந்த அளவு பலன் உள்ளது? என்பதை நீங்கள் வந்து பார்க்க வேண்டும்.
அம்மா அவர்களின் அரசிலே தான் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. சட்டக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தை இந்த மாவட்டத்திற்கு கொடுத்தோம். அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி என ஏராளமான கல்லூரிகளை திறந்து ஏராளமான ஏழை, எளிய குடும்பத்தில்  பிறந்த மாணவன் கூட பட்டப்படிப்பு படிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தந்த அரசு அதிமுக அரசு தான்.

ஒரு மாவட்டத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஒரு துரும்பை கூட நீங்கள் கொண்டு வரவில்லை. நாங்கள் செய்த திட்டங்களை இன்று அடுக்கிக் கொண்டுள்ளோம். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் மக்களுக்கான திட்டங்களை செய்தோம். அதனால் மக்கள் எங்களுக்கு பெருமை செய்தார்கள். அதுபோல கூட்டுக் குடிநீர் திட்டங்களை கொடுத்தோம். தேனி மாவட்டத்தில் 18-ம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 58-ம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது .பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. 

மேலும் கம்பத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டம் தந்த அரசாங்கம் அம்மா அவர்களின் அரசாங்கம். வீரபாண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. இப்படி ஏராளமான திட்டங்களை கொண்டு வந்த காரணத்தால் தான் நாங்கள் இன்று உங்கள் முன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறோம். திமுக இப்படி ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்ததா?ஆனால் ஸ்டாலின் அவர்கள் எப்போது பார்த்தாலும் போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கும் பொம்மை முதலமைச்சராக உள்ளார்.

அதை இங்கே இருக்கிற தொலைக்காட்சிகள் அழகாக படம் பிடிப்பார்கள். நான் பேசுவதை போட மாட்டார்கள். நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். ஒன்றுமே செய்யாத பொம்மை முதலமைச்சருக்கு இவ்வளவு முன்னுரிமை தருகிறீர்கள். நாங்கள் மக்களுக்கு ஏராளமான பணிகளை செய்துள்ளோம். இதனை மக்களிடம் எடுத்துச்செல்லுங்கள்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக சட்டப் போராட்டம் நடத்தி உயர்த்தி வெற்றி பெற்றார். உச்ச நீதிமன்றத்திலே அம்மா அவர்கள் சட்ட நுணுக்கங்களுடன் போராடி தீர்ப்பை பெற்று நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம். அம்மா அவர்கள் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த என்னிடம் 142 அடியாக இருந்த நீர்மட்டத்தை அணையை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

அப்போது அணையின் உறுதித் தன்மை எப்படி இருக்கிறது? என்பதை ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டது. அதன் பேரில் நாங்கள் டெண்டர் விட்டு பணிகளை எல்லாம் துவக்கினோம். பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் தடைப்பட்டது. அணையின் நீர் மட்டம் இன்று வரை 152 அடியாக உயர்த்தப்படவில்லை. இப்போது அதிமுக ஆட்சி நடந்திருந்தால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டிருக்கும். முல்லைப் பெரியாறு அணை என்பது 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரம். இங்கே உள்ள விவசாயிகளும், தொழிலாளர்களும் இந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை மட்டும் தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் அதிமுக அரசு மீண்டும் உங்களால் தேர்ந்தெடுக்கப்படும். அப்போது அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைந்த அரசாங்கமும் அண்ணா திமுக அரசாங்கம் தான். நாட்டுக்காக உழைத்த பெரும்பாலான தலைவர்களுக்கு நினைவு மண்டபம் அமைத்த ஒரே அரசு திமுக அரசாகும். அதுபோல காவிரி -குண்டாறு திட்டத்தை நிறைவேற்றியதும் அதிமுக அரசு தான்.

இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட மாடல் அரசு, திராவிட மாடல் அரசு என்று பேசிக் கொண்டிருக்கிறார். இது திராவிட மாடல் அரசு அல்ல ஸ்டாலின் மாடல் அரசு. இந்த ஆட்சி வந்த ஒரே வருடத்தில் நான் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக எச்சரிக்கை விடுத்தேன். சட்டமன்றத்திலும் எச்சரித்தேன்.
தமிழக முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்துங்கள்.இல்லாவிட்டால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும் போதைக்கு அடிமையாகி பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தேன்.
இன்றைய தினம் ஸ்டாலின் மாணவர்களையும், இளைஞர்களையும் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்று தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியிடுகிறார். நான் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே சொன்னேன். போதையை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்துங்கள் என்று எச்சரித்தேன். ஆனால் கண்டுகொள்ளவில்லை. இன்றைய தினம் போதைக்கு அடிமையாகி கஞ்சாவிற்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் நடைபெறுகின்றன.

தொலைக்காட்சியை பார்த்தாலும் சரி, பத்திரிகைகளை திறந்தாலும் சரி நெஞ்சம் பதறுகிறது. எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை.பள்ளியில் படிக்கிற மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறு ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பெயரையும் கெடுக்கும் விதத்தில் உள்ளது. பெண்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அச்சத்துடன் அனுப்பும் நிலை உள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை இந்த ஸ்டாலின் அவர்கள் .இப்போது அப்பா அப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொண்டிருக்கும் போது, அப்பா அப்பா என்று கதறிக் கொண்டிருக்கும்போது இந்த ஸ்டாலின் எங்கே போனார். எவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
இதையெல்லாம் முடிவுக்கு கொண்டு வருகின்ற காலம் வெகு சீக்கிரத்தில் வரும் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் கிட்டத்தட்ட 2  மாதங்களில் தமிழகத்தில் 185 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
அதேபோல பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த 2  மாதங்களில் 273 புகார்கள் பதிவாகியுள்ளன. ஆக இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சேர்கெட்டு விட்டது. இன்றைக்கு ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரியான பெண், தன் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்று சொல்லுகிற அவலமான நிலை நிலவுகிறது. அப்படிப்பட்ட உயர் பதவியில் இருக்கிற பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன ஆகும் என்ற எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல அண்ணா பல்கலைக்கழகத்திலே பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி சொன்ன சார் சார் என்று பேசிக் கொண்டிருந்தவர் யார் என்று நாம் கேட்டோம்.யார் அந்த சார் என்று ?அதோடு இந்த விவகாரத்தை மூடி மறைத்து விட்டார்கள். இந்த வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி.அந்தஸ்தில் நீதிமன்றத்தின் மூலம் அதிகாரிகள் நியமியமிக்கப்பட்டார்கள். அவர் அரசாங்கத்திற்கு கட்டுப்படாத காரணத்தால் இந்த விசாரணை அதிகாரியிலிருந்து விலகி விட்டார்.
பொம்மை முதலமைச்சர் ஆளுகின்ற தமிழகம் இன்றைக்கு அலங்கோலமாக இருக்கிறது. இது மிகவும் வேதனையாக உள்ளது

நேற்றைய தினம் தர்மபுரியில் திமுக மாவட்ட செயலாளர் பேசுகிறார்,என் சொல்லுக்கு கட்டுப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் என்றாலும் காவல்துறை கண்காணிப்பாளர் என்றாலும் இந்த இடத்தில் இருக்க மாட்டீர்கள் நடப்பதே வேறு என்று பகிரங்கமாக மிரட்டுகிறார்.அப்படி என்றால் அதிகாரிகள் எப்படி சுதந்திரமாக செயல்படுவார்கள்? ஒரு சில அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்யலாம் என்று நினைத்தாலும் திமுக அரசு நேர்மையாக இருக்க விடுவதில்லை.

பத்து ரூபாய் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்தும் இன்னும் திருந்தவில்லை. இன்னும் இரண்டு மூன்று தினங்களில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு வர உள்ளது. அப்போது என்ன நடக்க உள்ளது? என்பதை பார்க்கலாம். ஏழை, எளிய மக்கள் மதுபானக் கூடத்திற்கு சென்று மது வாங்கி அருந்தும் போது, ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் வண்ணமாக அவர்களிடம் இருந்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் கொள்ளையடிக்கிறார்கள். கேட்டால் மேலிடத்திற்கு போகிறது என்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 என்றால் ஒரு கோடி பாட்டலுக்கு ரூ.10 கோடி, ஒரு மாதத்திற்கு ரூ.300 கோடி, ஆண்டிற்கு ரூ.3600 கோடியை கொள்ளையடிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? ஸ்டாலின் ஒரு திட்டத்தை அறிவிப்பார். அறித்தவுடன் மறு நாள் குழு அமைப்பார். இதுவரை 54 குழுக்கள் அமைத்துள்ளார். அத்துடன் அதை நிறுத்தி விடுவார்கள். நாட்டு மக்கள் வறுமையில் உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் கார் பந்தயம் நடத்த வேண்டியது அவசியமா? ஏழை மக்கள் சைக்கிள் வாங்க வழியில்லாமல் உள்ள நிலையில் கார் பந்தயம் அவசியமா? கருணாநிதிக்கு எழுதாத பேனாவை ரூ.82 கோடி மக்கள் வரிப்பணத்தில் கடலில் கொண்டு வைக்கப் போவதாக சொல்கிறார்கள். எழுதுகிற பேனாவை அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு கொடுங்கள் நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் எழுதாத பேனாவிற்கு 82 கோடியில் பேனா அமைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று மக்கள் கேட்கிறார்கள்? தமிழகத்தில் ஊதாரித்தனமான அரசு நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த 73 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்த போதும் மொத்த கடன் ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ரூ.3.5லட்சம் கோடிக்கு அதிகமாக கடன் வைத்துள்ளார்கள். எஞ்சி இருக்கிற ஓராண்டில் ரூ.5 லட்சம் கோடி என்ற கடன் இலக்கை எட்டி விடுவார்கள். இந்த கடன் எல்லாம் பொதுமக்கள் தலையில் தான் நிலையில் தான் வந்து விடியும். நம்மீது வரிச் சுமையை சுமத்தி நம்மிடமிருந்து தான் வசூலிப்பார்கள். ரூ.5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளீர்கள் இதுவரை ஏதாவது புதிய திட்டத்தை கொண்டு வந்தீர்களா? இதையெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிக்க வேண்டும். கடந்த 2021-ல் இருந்ததை விட 2024-25-ல் ரூபாய் ஒரு லட்சம் கோடி கூடுதல் வருவாய் தமிழக அரசுக்கு கூடுதலாக கிடைக்கிறது. ஆனால் எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை.

திமுக ஆட்சிக்கு வருவதற்காக 525 வாக்குறுதிகளை கொண்டு வந்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து சுமார் 15% திட்டங்களை மட்டும் தான் செயல்படுத்தி உள்ளார்கள். 85 சதவீதம் இனியும் முடிக்கப்படவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி தான் திமுக. அரசு ஊழியர்களை ஏமாற்றி நாமம் போட்டு விட்டார்கள். மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி என்று ஏமாற்றி விட்டார்கள்.100 நாள் வேலைத்திட்டத்தில் 150 நாட்கள் வேலை நாட்களாக உயர்த்தப்படும் என்றும்,ஸசம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள் அதையும் நிறைவேற்றவில்லை. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்புக்கு ஆதார விலை டன்னுக்கு ரூ.4500 வழங்கப்படும் என்று அறிவித்து விவசாயிகளுக்கும் நாமம் போட்டு விட்டார்.சமையல் சிலிண்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.100 மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று என்று அறிவித்துவிட்டு பெட்ரோலுக்கு வெறும் ரூ.3 மட்டும் குறைத்து, டீசலுக்கு குறைக்காமல் விட்டு ஏமாற்றி விட்டார்கள்.

பள்ளிக்கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்.
மின் கட்டணத்தை ஒரே நேரத்தில் 52% உயர்த்திய அரசு ஸ்டாலின் அரசு மட்டுமே. ஸ்டாலின் அளித்த 525 வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை சொல்கிறார். மிகப்பெரிய நாடகத்தை இன்று திமுக அரங்கேற்றுக் கொண்டுள்ளது.
இன்று விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவிற்கு உயர்ந்தது. அதிமுக ஆட்சியில் ரூ.40-க்கு தரமான அரிசி கிடைத்தது. இன்றைக்கு ரூ.60 ஆக விலை உயர்ந்து விட்டது. பூண்டு விலை, பருப்பு விலை உயர்ந்து விட்டது. மக்களுக்கு விலை உயர்வால் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது.
மக்களுக்குத்தான் வரி போடுகிறார்கள் என்று சொன்னால், மதுரை மாநகராட்சியில் ஆடு, மாடு, நாய், குதிரை, பன்றி, பூனை என அனைத்து விலங்குகளுக்கும் வரி போட்ட பெருமை ஸ்டாலின் அரசுக்கு தான் சேரும். எல்லாவற்றிற்கும் வரி போட்ட ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான்.

இப்போது மொழிக்கொள்கையை பற்றி பேசுகிறார். எம்ஜிஆர் காலத்திலும், அம்மா அவர்களின் காலத்திலும் இரு மொழிக் கொள்கைதான் என்பதை நாங்கள் ஆணித்தரமாக பலமுறை கூறிவிட்டோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடிக்கு எதிராக ஸ்டாலின் கருப்புக் கொடி பிடித்தார். இன்றைக்கு பிரதமர்  சென்னைக்கு வரும்போது வெள்ளைக்கொடி பிடிக்கிறார். ஸ்டாலின் அவர்களுக்கு வெள்ளைக்கொடி வேந்தர் என்று பட்டம் கொடுத்தால் சரியாக இருக்கும்.ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு.

ஆனால் அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர், அம்மா அவர்கள் என்ன கொள்கைகளை பின்பற்றினார்களோ, அதே கொள்கையைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். ஆனால் திமுக அப்படி அல்ல. அங்கம் வகிப்பது இந்தியா கூட்டணி. ஆனால் பாரதிய ஜனதா அமைச்சர்களை வரவழைத்து நாணயம் வெளியிடுகிறீர்கள்.மத்திய அரசைப் பார்த்து பயம் உங்களுக்கு. வழக்கு போட்டு விடுவார்கள் என்று.
திமுக-வை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல. திமுக என்ற தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தான் எங்களது தலையாய கொள்கை. ஸ்டாலின் மத்திய அரசாங்கம் எங்களுக்கு நிதி தரவில்லை தரவில்லை என்று கூறுகிறார். இங்கே பேசி என்ன பயன்?நாடாளுமன்றத்திற்கு சென்று பேசுங்கள். பேசமாட்டார்கள், ஏனென்றால் மத்திய அரசைக் கண்டு பயம்.அவர்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் தேவையானதை பெற ஸ்டாலினுக்கு திறமையல்ல.
13 ஆண்டு காலம் திமுக கட்சியில் ஆட்சியில் இருந்தது. மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. மத்தியிலும் ஆட்சியில் இருந்தது.எந்த பெரிய திட்டங்களை நீங்கள் கொண்டு வந்தீர்கள்? எவ்வளவு நிதியை பெற்றீர்கள்? எதுவும் இல்லை. உங்கள் குடும்பத்திற்கு தேவையான பதவிகளை மட்டும் பெற்றுக் கொண்டீர்கள். தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் மத்தியில் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது தேவையான நிதியை பெற்றிருக்கலாம். தமிழ்நாடு வளர்ந்திருக்கும்.அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் ஏழை,எளிய மக்களுக்காக அம்மா மினி கிளினிக் கொண்டுஷவரப்பட்டது.பள்ளி மாணவர்களை திறமையானவராக உருவாக்க மடிக்கணினி திட்டம் கொண்டு வந்தோம் அதையும் நிறுத்தி விட்டீர்கள். ஏழை,குடும்பப் பெண்கள் திருமண வயதை அடைகிற போது பொருளாதார சூழ்நிலை காரணமாக திருமணம் நடைபெறுகிறது.அம்மா அவர்கள் ஆட்சியில் திருமண நிதி உதவி திட்டம் ரூ.50,000, தாலிக்கு தங்கம் கொடுத்தோம் அதையும் நிறுத்தி விட்டீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் உரிய நேரத்தில் வீடு திரும்ப இருசக்கர வாகன மானிய திட்டம் கொண்டு வந்தோம் அதையும் நிறுத்தி விட்டீர்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சட்டமன்ற பொது தேர்தலின் போது ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்த ஸ்டாலின் இப்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று கூறி சமாளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று பிரச்சாரம் செய்தார்கள். 4 ஆண்டு காலம் முடிந்துவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் உள்ளது என்று உதயநிதி கூறினார். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் கூறிவிட்டார். அதுதான் இவர்களின் ரகசியம்.

சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் மருத்துவராக வேண்டும், பல் மருத்துவராக வேண்டும் என்று அம்மா அவர்களின் அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து சட்டம் இயற்றி, அதன் மூலம் இன்று சுமார் 3400 பேர் டாக்டர் ஆகியுள்ளார்கள். அண்ணா அவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார்கள். அதை அதிமுக அரசு தான் செயல்படுத்தி காட்டியது.

அதுபோல தேனி மாவட்டத்தில் உள்ள ஒருவர் அதாவது ஓ.பி.எஸ் எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல். அவரை நம்பி வேறு யாரும் ஏற மாட்டார்கள் என்று  தெரிவித்திருக்கிறார். நான் சில தகவல்களை கூறுகிறேன் எது சரி?எது தவறு ? என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
அம்மா அவர்கள் மறைவுக்குப் பின் இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று தர்மயுத்தம் என்று தொடங்கினார். இவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் செல்வார். பெரும்பான்மை ஆதரவுடன் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று திமுக தீர்மானம் கொண்டு வந்த போது, அம்மா அவர்களின் அரசுக்கு எதிராக ஓட்டு போட்ட மனிதர் இந்த மனிதர். அம்மா அவர்கள் இரவு பகல் பாராமல், ரத்தத்தை வியர்வையாக சிந்தி 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்து அதிமுக ஆட்சியை கொண்டு வந்தீர்கள். அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு திமுகவிற்கு துணை நின்றவர் இந்த மண்ணிலே பிறந்தவர். நானா துரோகம் செய்தேன். அதற்கும் மேலாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தொடர்ந்து பணிகளை செய்தவர். 2 கோடி  அதிமுக தொண்டர்களின் சொத்து தலைமை கழகக் அலுவலகம்.அந்த சொத்தை ரவுடிகளை கொண்டு சென்று அடித்து நொறுக்கி, திமுக உதவியுடன் சீல் வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். இது துரோகம் இல்லையா? எங்களை விட்டு போகாதீர்கள் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டோம்.நீங்களாக போனீர்கள்.

அம்மாவிற்கு விசுவாசம் விசுவாசம் என்று கூறிக்கொண்டு, கடந்த 1989-ல் அம்மா அவர்கள் போடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது நீங்கள் யாருக்கு வேலை செய்தீர்கள்? வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு வேலை செய்தார். இவரா அம்மாவிற்கு விசுவாசமாக இருந்தவர்? அதே சேவல் சின்னத்தில் 1989 ல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான். நீங்கள் 2001 இதான் எம்.எல்.ஏ. நான் 1989 லிலேயே நான் எம்.எல்.ஏ. உங்களைவிட 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், வாரிய தலைவர் என பல பதவிகளை வகித்தவன். அவருக்கு பதவி இல்லையென்றால் கட்சியை பார்க்க மாட்டார்.அவரை மட்டும் தான் பார்த்து கொள்வார்

உழைக்கின்ற மக்களுக்கு கதவைத் தட்டி பதவி கொடுக்கின்ற ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே.இது மூழ்குகிற கப்பல் இல்லை. கரை சேருகிற கப்பல். இந்த கப்பலில் ஏறுகிறவர் பிழைத்து கொள்ளலாம். ஏறாதவர் நடுக்கடலில் சென்று விடுவார். நான் எந்த மேடையிலும் யாரையும் தவறாக பேசமாட்டேன். இவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதை விட்டு விட்டு, அவருக்கு பதவி இல்லை என்ற காரணத்திற்காக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். கடவுள் இருக்கிறார்.

2026-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இதே மேடைக்கு மீண்டும் நான் வருவேன்.க ழகம் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.
ஒரு பயிர் செழித்து வளருகின்ற போது களைகள் முளைக்கும். களைகள் முளைத்தால் பயிர் செழித்து வளராது. அதனால் விவசாயிகள் பயிர் செழித்து வளர்வதற்காக களை எடுப்பார்கள். அதிமுக என்ற பயிர் செழித்து வளர்ந்து 2026-ல் நல்ல அறுவடையை கொடுக்கும்.அதிமுக கட்சியில் மட்டும்தான் மேடைக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்களும், மேடைக்கு மேல் அமர்ந்திருப்பவர்களும் பதவிக்கு வர முடியும். இந்தியாவில் மற்ற எந்த கட்சித் தலைவரும் இப்படி சொல்வார்களா?.
அதிமுகவில் நான் மட்டும் பொதுச் செயலாளர் அல்ல. அனைத்து தொண்டர்களும் பொதுச்செயலாளர் தான். 2026-ல் கழக வேட்பாளர்களை வெற்றிச் பெற செய்து இரு தெய்வங்களின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபடுவோம்.
ஊடகங்களில் பத்திரிகைகளில் வரும் செய்திகளையெல்லாம் நம்ப வேண்டாம். மக்கள் தெளிவாக உள்ளார்கள். அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவித்துக் கொண்டு, ரமலான் நோன்பு இருக்கும் அனைத்து இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் நோன்புக்கு அரிசி தந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் தான் என்பதை தெரிவித்துக் கொண்டு நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் மேடையில் ஏழை,எளிய மக்களுக்கு இலவச தையல் மிஷின்கள், கிரைண்டர்கள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.


முன்னதாக இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்திற்கு வந்த கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு சாலையின் இருபுறமும் மலர்களை தூவியும், பூரண கும்ப மரியாதையும் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விழா மேடையில் பொக்லைன் மூலமாக ராட்சத மாலை அணிவிக்கப்பட்டதுடன்,  வெள்ளியில் வீரவாள், வேல் உள்ளிட்ட பொருட்களும் கொடுக்கப்பட்டு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களான பாரதிய பார்வேர்டு பிளாக் கட்சித் தலைவர் முருகன் ஜி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கதிரவன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.டி.ராஜா, அண்ணாதுரை, மாவட்ட கழக செயலாளர்கள் கிருஷ்ணமுரளி, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையா, மாவட்ட செயலாளர் முனியசாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பார்த்திபன், கழக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் தவசி, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், தேனி கிழக்கு மாவட்ட கழக அவை தலைவர் முருகன்,தேனி கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளர் முத்துலட்சுமி, தேனி கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் சோலைராஜ், தேனி கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர் வைகை பாண்டி, ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், செயற்குழு உறுப்பினர்கள் சீதாலட்சுமி, தனலட்சுமி சொக்கலிங்கம், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் பாலச்சந்தர் உள்பட அதிமுக மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டனர். முடிவில் மதுராபுரி கிளை செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

நாகராஜ், செய்தி ஆசிரியர் 


.........................

Comments