தேனி கருவேல்நாயக்கன்பட்டி கள்ளர் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு
தேனி, மார்ச்.1-
தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் நடுநிலைப் பள்ளி படிப்பை முடித்த பின்பு உயர்நிலைப்பள்ளி படிப்பிற்காக ஆண்டிபட்டி தாலுகா க.விலக்கு அருகே உள்ள முத்தனம்பட்டி, ராஜதானி, குன்னூர் மற்றும் தேனி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தொலைதூரம் சென்று உயர்நிலை பள்ளி படிப்பை படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக இங்கே நடுநிலைப்பள்ளி படிப்பு வரை படித்த சில மாணவ, மாணவிகள் வெளியூர் சென்று படிக்க முடியாத காரணத்தினால் பள்ளி படிப்பை நடுநிலை பள்ளியுடன் நிறுத்த கூடிய சூழ்நிலைகூட சிலருக்கு ஏற்படுகிறது.
எனவே கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி கல்வி மேலாண்மை குழு சார்பில் இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென அமைச்சர் ஐ.பெரியசாமி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் துறை ஆணையர், இணை இயக்குனர் மற்றும் கள்ளர் சீரமைப்புத்துறை அதிகாரியிடம் ஏற்கனவே கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தேனி மாவட்ட புதிய கலெக்டராக வந்துள்ள ரஞ்ஜீத் சிங் அவர்களை கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி கல்வி மேலாண்மை குழு தலைவர், கவுன்சிலர் கடவுள் தலைமையில் கல்வி குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், அழகேசன், கருப்பசாமி, குமரேசன் மற்றும் ஆசிரியர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாகராஜ், செய்தி ஆசிரியர்
...........................
Comments