கோவை சிட்கோ தொழிற்சாலையில், மேற்கூரை விழுந்து ஆசிட் கிடங்கு உடைந்து அமிலம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அச்சம்
கோவை சிட்கோ பகுதியில் சக்தி சுந்தர் ஆசிட்ஸ் (பி)லிட்., என்ற பெயரில் தனியார் தொழில் கூட கட்டிடத்தில் தொழிற்சாலைகளுக்கான அமிலம் மற்றும் கெமிக்கல் மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் அமிலம் (ஆசிட்) மற்றும் வேதிப்பொருட்கள் (கெமிக்கல்ஸ்) சேமிப்பு கிடங்கில் இருப்பு வைத்து தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு விற்ப்பதுக்காக, சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு அதிக அளவு அமிலம் இருப்பு வைப்பதால் அதன் தாக்கம் காரணமாக அருகில் உள்ள தொழிற்சாலைகளின் இரும்பு தகட்டால் ஆன மேற்கூரைகள் எளிதில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து விடுகிறது. இது குறித்து அருகில் உள்ள நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் அவ்வப்போது புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த சேமிப்பு கிடங்கு தொழிற்சாலையின் மேல் தளத்தில் இருந்த இரும்பு தகட்டால் ஆன மேற்கூரை திடீர் என்று பெயர்ந்து விழுந்தது. இதன் காரணமாக கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அமிலங்களை சேமித்து வைக்கும் கிடங்கு உடைந்து அமிலம் எரிமலையாக, நீர் குழம்பு போல வெளியேற துவங்கியது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அமில( ஆசிட்) குழம்பு சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சாலைகளிலும் அதன் அருகே உள்ள தாழ்வாக பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளின் உள்ளேயும் பெருக்கெடுத்து ஓடியது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாநகராட்சி சுகாதார இன்ஸ்பெக்டர் ஆப் பாக்டரீஸ், மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுக்கு அருகில் உள்ள தொழிற்சாலையை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் தகவலை புகாராக அளித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தி சென்றனர்.
அதிக அளவில் அமிலம் வெளியேறியதால் சுற்றுப்புறத்தில் உள்ள நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். சாலைகளில் அமிலம் வெள்ளம் போல் ஓடியதால் குழந்தைகள் முதல் பலருக்கும் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது
தொழிற்சாலைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின் பற்றாமல் எதும் முறையாக பாதுகாப்பு சாதனம் இல்லாமலும், இந்த நிறுவனம் செயல்பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோவை சிட்கோ சுற்றுவட்டார பகுதியில் இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதிபடுத்துமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments