Skip to main content

தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம்: அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று (9.8.2024) தொடங்கி வைத்தார். 

அதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் 38 கல்லூரிகளில் படிக்கும் 3292 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைவார்கள்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தேனி மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 3962 மாணவர்களுக்கும், 4889 மாணவியர்களுக்கும் என மொத்தம் 8851 மாணவ மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சைக்கிளின் விலை ரூ.4900,  மாணவியர்களுக்கு வழங்கப்படும் ஒரு சைக்கிளின் விலை ரூ.4760/-ஆகும்.

முதற்கட்டமாக (9.8.2024) இன்று ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 24 மாணவர்களுக்கும், 22 மாணவியர்களுக்கும் என மொத்தம் ரூ.2.22 லட்சம் மதிப்பிலான 46 சைக்கிள்களை தமிழ்நாடு  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ம.சக்கரவர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாண்டியன், நிர்வாக ஆசிரியர் 

Comments